Tuesday, 6 September 2016

என்னதான் தருவேன் உனக்கு...!!! என் கவிதை சு.மா.காயத்ரி

என்னதான் தருவேன் உனக்கு
என் கவிதை சு.மா.காயத்ரி


என்னதான் தருவது உனக்கு
என்னை தவிர..
நீயும் நானுமாய் கழிந்த
காலை பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நாமாகவே
விடிகின்றது...
என் தோள்கள் துவண்ட
வாடிய பொழுதும்
என்னையே வென்று விட்டாய்
என் தோழனாய் ...
என் தந்தையை போன்று
யாருமில்லை என்று மார்தட்டிய
நேரங்களில்
எனக்கான ஆபத்தில்
எனக்கான  பாதுகாப்பில்
என் தந்தையாகிப்  போனாய்  ...
என் தாயின் நினைப்பில் துவண்ட
வாடிய நேரங்களிலும்
என் மனம் தளர்ந்த காலங்களிலும் 
தாயுமானவனாய் நின்றாய்..
சில தருணங்களில்
சிறு குழந்தை போல உந்தன் பேச்சும்
மழலையின் மனம் மாற
அந்த சிரிப்பும்...
என்றும் என் இதயத்தின்
பொக்கிஷங்கள்...
சிறு சமயங்களில் நான் வெடித்து அழ
அந்த அணைப்புகள் உணர்த்தியது
என் பாதுகாப்பை..
அந்த ஸ்பரிசம்
எனக்குள் சொன்னது
மீண்டும் எப்பொழுது அழலாம் என்று...
ஒவ்வொரு காலையும்
உன் ஆழ்ந்த துயிலில்
உன்னை ரகசியமாய்
காதலித்து கொண்டிருக்கிறேன்
உனக்கே தெரியாமல்...
இதுதான் வாழ்க்கையா என்ற பொழுது
இதுவல்ல இதுவும் தான் 
வாழ்கை என்று !!!
வசந்தங்களை காட்டினாய்
உன் மனைவி என்பதை தவிர
நான் என்றுமே உன் ரசிகை...
யாருக்காகவும் எழுதாத என் பேணா
என்று உனக்காக எனக்காக
நிற்காமல்  எழுதிக்கொண்டே இருக்கிறது
பெருமையாக சிறு கர்வத்தோடு...
எல்லா ஆண்களும்  இப்படியா
என் தெரியாது ஆனால்
எனக்கான ஆண்மகன் நீதான்
என்றுமே நீதான்...
வேண்டும் வேண்டும் என்ற பெண்களே
நேசியுங்கள் ரகசியமாய் ரசியுங்கள்

உங்கள் ஆண்களை...